ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது. தொடர்ந்து பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தவறிய ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்களை ஒடுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஈரானில் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்தியகிழக்கு பகுதியில் தனது இராணுவக் குவிப்பை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் இரண்டு பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பல போர் விமானங்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் என்பதால் இரண்டு போர்க் கப்பல்களிலும் ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் சுமார் 5000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் முதலே உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கடலில் தான் சுற்றிவருகிறது.
முதலில் மத்தியதரைக் கடலுக்குச் சென்ற இந்தப் போர்க்கப்பல், பின்னர் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அட்லாண்டிக் முழுவதும் சுற்றி சென்றது. இப்போது USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மீண்டும் மத்திய கிழக்கு நோக்கிச் சென்றுள்ளது.
ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் அந்நாட்டை அணுசக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கையெழுத்திட வைப்பதற்காக அமெரிக்கா ஈரானை தாக்காமல் நாட்களை கடத்தி வருகிறது.
பொதுவாக, அமைதி காலத்தில் ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பல் கடலில் 6 மாதங்கள் வரையே நிறுத்தப்பட்டிருக்கும். ஏற்கெனவே 8 மாதங்களாக கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு கப்பலின் கடல் இருப்பு மேலும் 11 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நீட்டிப்பு குறித்து கப்பல் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி டேவிட் ஸ்கரோசி தெரிவித்ததும் கப்பலில் உள்ள அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த ஜனவரி மாதமே போர்க் கப்பலின் பராமரிப்பு வேலைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் பல உபகரணங்கள் பழுதடைந்து விட்டதாகவும்,குறிப்பாக போர்க்கப்பலின் பிளம்பிங் அமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்தப் போர்க் கப்பலில் செயல்படாத நிலையில் இருக்கும் பல கழிப்பறைகளைப் பழுது பார்க்கும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
போர்க் கப்பலின் இயக்கங்கள் நாட்டின் இராணுவ இரகசியம் என்பதால், இந்தக்கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடமும் கூட தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் உண்மை.
எட்டு மாதங்களுக்கும் மேலாக இப்படி இருப்பதால் போர்க்கப்பலில் இருப்பவர்கள் கடும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 12 மாதங்களாக ஒரு மாலுமி தனது இளம் குழந்தையை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு மாலுமி தனது கொள்ளு தாத்தா பாட்டியின் இறுதி நாட்களைத் தவறவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் என அனைத்து சந்தோஷங்களையும் தவறவிட்டு நடுக்கடலில் இருக்கும், இந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் கடற்படையில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















