நான்கு ஆண்டுகள் நீடிக்கும் போரால் உக்ரைனில் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதால், அந்நாட்டின் எதிர்கால மக்கள் தொகைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சமநிலைகளை பாதித்துள்ளதுடன், மனிதவளத்தை மையமாகக் கொண்ட புதிய கவலைகளையும் எழுப்பியுள்ளது. ஒரு நாட்டின் வலிமை அதன் ராணுவ சக்தியிலும், பொருளாதாரத்திலும் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையை உருவாக்கும் மக்கள்தொகை அமைப்பிலும் அமைகிறது. அந்த அடிப்படை தளமே பலவீனமடைந்து வரும் சூழலில், உக்ரைன் இன்று எதிர்கொள்வது வெறும் போரின் விளைவுகள் அல்ல, அதன் நீண்டகால தேசிய நிலைத்தன்மையை தீர்மானிக்கக்கூடிய மக்கள் தொகை சவாலாகும்.
இந்த போர் உக்ரைனுக்கு எண்ணற்ற சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் அதிகம் பேசப்படாமல் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை “குழந்தைகள் பிறப்பு குறைவு” ஆகும். தொடர்ச்சியான வெடிகுண்டு சத்தங்களுக்கும், ஏர் சைரன்களின் அலறல்களுக்கும் மத்தியில், அந்நாட்டின் மக்கள் தொகை அடித்தளம் அமைதியாக சிதைந்து வருகிறது. இதனை பேரழிவான மக்கள் தொகை வீழ்ச்சி என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே ஐரோப்பாவில் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த உக்ரைன், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இன்னும் கடுமையான மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது. 2024-ம் ஆண்டில், அந்நாட்டில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 780 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதே கால கட்டத்தில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 90 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைனின் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் மூன்றரை மடங்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டில் சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்தது. தற்போது மொத்த கருத்தரிப்பு விகிதம் 0.9 முதல் 1.0 வரை மட்டுமே உள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தொகை நிலையாக இருக்க, 2.1 என்ற கருத்தரிப்பு விகிதம் தேவைப்படுகிறது. இந்த மக்கள் தொகை நெருக்கடி மூன்று முக்கிய காரணங்களால் தீவிரமடைந்துள்ளது.
சுமார் 65 லட்சம் அகதிகள் இன்னும் நாட்டிற்கு வெளியே உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்கள் மற்றும் சிறார்கள். அதேபோல, ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் போரில் உயிரிழந்ததால், 20 முதல் 35 வயதுக்குட்பட்டோரில் பாலின சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி, இடைவிடாத குண்டு வீச்சுகளின் அச்சத்தில் வாழும் சூழலில், குடும்ப திட்டமிடல் பலருக்கும் இரண்டாம் நிலை சிந்தனையாக மாறியுள்ளது. கெர்சன் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் சில இடங்களில், பிறப்புகளை விட மரணங்கள் 11 மடங்கு அதிகமாக உள்ளன.
இந்த பிரச்சனை போர் காலத்தைத் தாண்டி, நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக இருப்பதை உக்ரைன் அரசு உணர்ந்துள்ளது. இதன் காரணமாக 2040-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை மேம்பாட்டு திட்டம் ஒன்றுக்கு, 2024-ம் ஆண்டு இறுதியில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிதி ஊக்கத் திட்டங்களை மட்டும் நம்பாமல், பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு மூலம் வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்களை மீண்டும் வரவழைப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
உக்ரைன் எதிர்காலத்தில் இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ள நிலையில், 2051-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை சுமார் 2.5 கோடியாக குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்ற காலத்தின் உச்ச மக்கள் தொகையைவிட பாதிக்கும் குறைவாகவே தற்போது உள்ளது. இதனால், நிலத்தை மீட்டெடுப்பதற்காக மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதற்காகவும் உக்ரைன் அரசு போராடி வருகிறது.
















