ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டியில் நிர்வாக குளறுபடியால் பங்கேற்க முடியாமல் தேனி மாவட்ட வீரர்கள் திரும்பி சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சப் ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இது வீரர்களின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான போட்டியாகும்.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பயிற்சியாளருடன் ராமநாதபுரம் சென்றனர்.
அப்போது, தேனி மாவட்ட அணி பங்கேற்பதற்கான அனுமதி பதிவு முறையாகச் செய்யப்படவில்லை என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்க இட வசதி இல்லாமல், உணவின்றி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தேனிக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இதற்காகப் பயிற்சி பெற்று வந்த நிலையில், நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர்களது உழைப்பும், எதிர்காலக் கனவும் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
















