இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்து விட்டதாகவும், இது ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளுக்கு கிடைத்த நீதி எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து கமேனியால், தப்பிக்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஈரான் மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது எனக் கூறியுள்ள அவர், கமேனியின் உயிரிழப்பால் ஈரான் ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகளில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும் வரை ஈரான் மீது துல்லிய தாக்குதல் தொடரும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனிடையே அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமும் உறுதி செய்துள்ளது. ஈரான் ஊடகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன், பேரக் குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், 7 நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி தீர்ப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
















