திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம், ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் குப்பைகளால் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அத்துடன் குப்பைகளை தூர்வாரி குளத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குளத்தை தூர்வாரும் பணிகள் ஜனவரி 7-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், தற்போது பாதி பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முழு பணிகளும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் 3 மாதங்களில் குளத்தை சீரமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
















