மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழக பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவு 9:30 மணியளவில் டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக இந்த உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தற்போதைய கள நிலவரம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் உச்சதலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்வதேச விளைவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால வெளியேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் துபாய், தோஹா உள்ளிட்ட விமான நிலையங்களில் சிக்கியுள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
















