திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த மாசி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 21ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி தேரோட்டம் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாரானையும், உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்ற நிலையில், முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
பின்னர், பெரிய தேரில் வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கபெருமான் எழுந்தருளினார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ பக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசித் திருவிழா தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















