ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி வருகிறது.
கத்தாரில் உள்ள ராஸ் லபான் மற்றும் மெசயித் நகரங்களில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ்கிறது.
இந்த தாக்குதல் காரணமாக எரிவாயு உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது. ராஸ் லபான் தொழில் நகரம் மற்றும் மெசயித் தொழில் நகரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதனால் எல்என்ஜி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுவதாக, கத்தார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
















