ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்குமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அணு ஆயுத கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்தக் கூடாதென ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஐரோப்பாவையும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் தளங்களையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் பெற்றிருந்ததாகவும், விரைவில் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் எனவும் அவர் கூறினார்.
தீய ஆட்சியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு இது என்றும், அதனைச் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக விளங்கிய ஈரான், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறியதாக குறிப்பிட்ட அவர், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை அழித்து விட்டதாகவும் கூறினார். ஈரானுக்கு எதிரான போரில் தங்களின் கணிப்புகளைவிட அமெரிக்கா முன்னேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், 4 அல்லது 5 வாரங்களில் போர் முடியும் என திட்டமிட்டுள்ளதாகவும், அதனையும் தாண்டி போர் நீடித்தால் அதற்குரிய வலிமை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தங்களின் நோக்கம் தெளிவாக உள்ளதாகக் கூறிய அவர், முதலில் ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்க வேண்டியிருந்ததால் அதனைச் செய்துவிட்டதாக தெரிவித்தார். அடுத்தது அவர்களின் கடற்படையை அழிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே 10 கப்பல்களை தாக்கி விட்டதாகவும் கூறினார். அணு ஆயுதங்களைப் பெற முடியாத நிலையை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
















