தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
தருமபுரியில் உள்ள வள்ளலார் திடலில் தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த நேரலை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், தர்மபுரி மக்களவை உறுப்பினரான ஆ.மணி, அதிமுக மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்கள் கட்சி ஆட்சியின் சாதனைகள் குறித்து திமுக, அதிமுக நிர்வாகிகள் பேசியபோது கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த இருகட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். தனியார் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
















