அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழாவையொட்டி அதிகாலை அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, காலை சூரிய உதயத்தின்போது பள்ளியரையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடலில் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது.
இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி முழுக்கத்துடன் சூரிய உதயத்தை அய்யா அவரித்ததாக கருதி மலர்தூவி வழிபாடு நடத்தினர்.
இதனை அடுத்து, கோயில் நடை திறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்ன தர்மம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து தலைமை பதிக்கு ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர்.
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அய்யா வைகுண்டர் தலைமை பதியான சுவாமி தோப்புக்கு காவி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மேளம் முழங்க அய்யா இயற்றிய திரு ஏட்டை வாதித்தப்படி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
















