ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
முந்தைய 12 நாட்கள் நடந்த போரில் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்திய ஈரான் இம்முறை அந்த அளவுக்கு எதிர் தாக்குதல் நடத்தவில்லை.
நூற்றுக்கணக்கான ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் பெரிய அளவிலான பாதுகாப்பை அமைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு அருகில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் மட்டுமே சில இலக்குகளை ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்க முடிந்ததாக கூறப்படுகிறது.
போர் தொடங்கியதும் ஈரானின் பதிலடி கொடுக்கும் திறனைக் கட்டுப்படுத்துவதையே முதல் நோக்கமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் வைத்திருந்தன.
ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் உள்கட்டமைப்புகள் விமானத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவத் தலைமையகங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன.
இந்நிலையில், கடுமையான மற்றும் துல்லியமான தாக்குதல்கள் இன்னும் சில நாட்களுக்குத் தடையின்றி தொடரும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும், உலகம் முழுவதும் அமைதி என்ற இலக்கை அடையும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறைந்த உயர அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியே ஈரானின் தாக்குதல்களை நடுவானிலேயே இடைமறித்து அமெரிக்கா அழித்துள்ளது.
அதே நேரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் துல்லியமாக அழிக்கும் திறனுடைய ஸ்டாண்டர்ட் SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. மேலும், டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவி ஈரானின் முக்கிய இலக்குகளை அமெரிக்கா அழித்துள்ளது.
ஏற்கெனவே ஆபரேஷன் ரஃப் ரைடர் என்ற பெயரில் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நைஜீரியாவில் கிறிஸ்துவர்களை இனப் படுகொலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைப் போலவே ஈரான் மீதான Operation Epic Fury என்ற போர் நடவடிக்கையிலும் இராணுவ யுக்திகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் ட்ரம்ப் இன்னும் சில வாரங்களுக்குப் போர் நீடிக்கும் என்று அறிவித்திருப்பது இஸ்ரேலுக்கும் ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுதி தீவிரவாதிகள் என தொடர்ந்து போர்க்களத்திலேயே இருக்கும் இஸ்ரேலுக்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில் கூடுதல் ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பான்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
















