இந்தியாவின் பல பகுதிகளில் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா மாவட்டத்தில் பாதி எரிந்த விறகுகளை வீசி எறிந்து ‘ரார் ஹோலி’ எனும் வினோதத் திருவிழாவை மக்கள் கொண்டாடினர்.
பான்ஸ்வாரா மாவட்டத்தின் கடோல் பகுதியில் 250 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சடங்கு நடைபெற்றது. ‘ரார் ஹோலி’ அல்லது ‘ராடா’ என்று அழைக்கப்படும் இந்த விழாவில்,ஏராளமானோர் கலந்துகொண்டு மரக்கட்டைகளையும், கரித்துண்டுகளையும் ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து தங்களின் வீரத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
இந்த வினோதமான நிகழ்வைக் காண்பதற்காக பான்ஸ்வாரா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடோல் பகுதியில் திரண்டனர். நவீன காலத்திலும் மாறாத இத்தகைய பண்டைய வழிபாட்டு முறைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.
















