இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் புல் பரப்பளவில், சுமார் 77 சதவீதம் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளது என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த Blue Carbon மண்டலம், புவி வெப்பமடைதலைக் குறைப்பதிலும் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்திலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அழியும் நிலையில் உள்ள கடல் பசுக்களுக்கு, உயிர்வாழ கடல் புற்களே பிரதான உணவாகும். இந்த நிலையில், உலக கடல் புல் தினத்தை முன்னிட்டு வனத்துறை மேற்கொண்டு வரும் முன்னோடி மறுசீரமைப்புப் பணிகள் குறித்த முக்கியத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
சவுக்கு மரத்தால் ஆன சட்டங்களில் கடல் புல் நாற்றுகள், சணல் கயிறுகளால் பிணைக்கப்படுகின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்ட சட்டங்களை, பயிற்சி பெற்ற மூழ்கு வல்லுநர்கள் கடலடியில் கொண்டு சென்று முறையாக நடுகின்றனர். தற்போது பாக் ஜலசந்தியில் 4 ஏக்கர் மற்றும் மன்னார் வளைகுடாவில் 3 ஏக்கர் என மொத்தம் 7 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, TNSHORE என்ற பிரத்யேகத் திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடாவின் நான்கு முக்கியத் தீவுகளில் 18 ஏக்கர் பரப்பளவில் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருவதாக தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
















