திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட உள்ளது. முன்னதாக தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே நீண்ட இழுபறி நிலவி வந்தது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டிற்கு பின், திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி பிரச்னை முடிந்துவிட்டது போல் ரியாஷ்கன் கொடுத்தார். தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நடைபெற்றதாக செய்தியாளர்களை நோக்கி அவர் சைகை காண்பித்தார்.
திமுக உடனான தொகுதி பங்கீட்டில் 28 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்
தொகுதி பங்கீட்டில் எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, கூட்டணி என்று வந்துவிட்டால் அனைத்தையும் சாத்தியப்படுத்தி விட முடியாது என்றும் கூறினார்.
சிலவற்றை தியாகம் செய்து கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
















