ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிதியுதவி மற்றும் அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்றும் வகையிலான அதிரடித் தொழில் கொள்கையை ஐரோப்பிய ஆணையர் ஸ்டீபன் செஜோர்னே அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய முன்னுரிமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உத்தி, அனைத்து துறைகளில் ஐரோப்பாவின் தற்சார்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவின் வாகன உற்பத்தி மற்றும் எரிசக்தி சார்ந்த துறைகளில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சீனத் தயாரிப்புகளின் அதீத இறக்குமதியால் இந்த ஆண்டு இறுதிக்குள் கார் உற்பத்தித் துறையில் மட்டும் 6 லட்சம் வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க புதிய சட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்குக் குறிப்பிட்ட வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 70% பாகங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தங்கள் சந்தையில் அனுமதி வழங்காத நாடுகளுக்கு, யூரோ யூனியனின் பொது நிதி ஒப்பந்தங்களில் அனுமதி மறுக்கப்படும் என்றும், மேலும், சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 100 மில்லியன் யூரோக்களுக்கு மேலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
















