கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 937 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இலங்கை தமிழர் முகாமின் தலைவராக சிவகுமார் என்பவர் பதவி வகித்து வந்தார்.
நேற்றிரவு முகாமில் நுழைந்த மர்ம கும்பல் சிவகுமாரின் முகத்தில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். உடனடியாக, அங்கிருந்தவர்கள் சிவக்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அரசு தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, முகாமில் உள்ள ஒரு கும்பல் சிவக்குமாரை வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சிவகுமாரின் கொலையைக் கண்டித்து சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
















