மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்கள் உட்பட 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 12 புள்ளி மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மஜ்லிஸ் பாா்க் – மௌஜ்பூா் – பாபா்பூா் மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சியால் டெல்லி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்தின் மகத்தான பாரம்பரியத்திற்கும் ஏற்பட்ட அவமானம் என்று குறிப்பிட்டார். பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணை அவமதித்ததற்காக மேற்குவங்க மக்கள் திரிணாமூல் காங்கிரஸை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
















