மானாமதுரையில் 2 தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைதாகி, கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரில் கடந்த 6ஆம் தேதி இரு இளைஞர்களை அரிவாளால் தாக்கிய விவகாரத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிஷன் மற்றும் குணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஆகாஷ் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஆகாஷ் உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதால் தான் இளைஞர் உயிரிழந்ததாக கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை வழி விடுமுருகன் கோயில் அருகே மதுரை – ராமேஸ்வரம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்டோர் 20 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டகாரர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
















