வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு ஓராண்டுக்கு முன்பு தலைமை ஆசிரியராக மைக்கேல் ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். கல்வி மட்டும் போதாது வெளி உலகமும் தெரியவேண்டும் என்பதற்காக மாணவர்களை அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது அவரது வழக்கம்.
அந்த வகையில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 21 மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
இதற்காக அவர் வைத்த போட்டி மிகவும் சுவாரஷ்யமானது. அதாவது 16ம் வாய்ப்பாடு வரை படித்து கூறினால் விமான பயணம்… அதன்படி வாய்ப்பாடு ஒப்பித்த 21 மாணவர்களையும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்று பல்வேறு பகுதிகளை சுற்றிக் காட்டியுள்ளார்.
பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும் இடமாக மட்டுமல்ல. எதிர்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்க மாணவர்களை தயார் செய்யும் இடம் என்பதை தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் இந்த விமான பயணம் மூலம் நிரூபித்துள்ளார்…
















