தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பான மோதல் ஓயாத நிலையில், பட்டியலை தயார் செய்த பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் வழங்கப்பட்டது. இதனை அடுத்து, போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் விரும்பும் 28 தொகுதிகளை அடையாளம் காண 42 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முடிவெடுத்தனர். திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸ் தரப்பும் தங்களுடைய பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தயாராகி வருகிறது என்றும், அதில், வெற்றியடைய கூடிய தொகுதிகளை கேட்டு பெறவுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
















