தமிழகம் முழுவதும் போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வழக்கில், தனது சரக்கு வாகனத்திற்கு HDFC இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாகன காப்பீடு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் பால்பாண்டி ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அதில், பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு போலியானது எனக்கூறி HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், இணையதளம் மூலம் 4 சக்கர வாகனத்தின் பதிவை, இருசக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து, காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுத்தது தெரியவந்தது.
மேலும், வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி போலியாக காப்பீடு எடுத்து கடந்த 6 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















