மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, உலகின் இருபது சதவீத எண்ணெய் வளங்கள் கொண்டு வரப்படும் நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் மிக ஆபத்தான பகுதியாக மாறியது.
இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததுடன், அதன் உப பொருட்களின் விலை உயர்வதற்கும் காரணமாக அமைந்தது.
இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவலாக காணப்பட்டது. இத்தகைய சூழலில், ராஜதந்திர உறவுகளுக்கு பெயர் பெற்ற இந்தியா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி பெற்றது.
அந்த வகையில் ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்ட பிறகு அந்த வழியை முதல்முறையாக ஷென்லாங் என்ற கப்பல் கடந்து வந்துள்ளது.
லிபேரியா நாட்டு கொடி ஏந்திய இந்த கப்பலை கேப்டன் சுக்சாந்த் சிங் சந்த் என்ற இந்தியர் தலைமையிலான குழுவினர் இயக்கி வந்தனர்.
சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த கச்சா எண்ணெய், மும்பை வந்தடைந்துள்ளது.
இதன்மூலம், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















