காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் குறித்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இத்திட்டத்திற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஒரு மாத அவகாசம் வழங்கியும், மீதமுள்ள மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தினமும் 2 கோடி மது பாட்டில்கள் விற்கப்படுவதை சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31-ஆம் தேதி வரை நீதிபதிகள் இறுதி அவகாசம் வழங்கினர்.
அவ்வாறு அமல்படுத்தத் தவறினால், அதன்பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் வீதம், சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
















