அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை மேற்கொண்டுள்ள இந்தியா ஈரானுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறது. எந்த அணியிலும் சேராமல் எல்லா நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதல் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தும் ராஜதந்திரம் என்று கூறப்படுகிறது
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய உறவு இருந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950-ல் ஈரானுடன் ஒரு முறையான நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டது.
பிறகு 2001-ல் ஏற்பட்ட ஈரான் பிரகடனமும், 2003-ல் இந்திய பிரகடனமும் நவீன காலத்திலும் இருநாடுகளின் ஒத்துழைப்புக்கு அடித்தளமிட்டன.
2016-ல் பிரதமர் மோடியின் ஈரான் பயணமும், 2018-ல் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் இந்திய பயணமும் பரஸ்பர உறவை வளர்த்தெடுத்தது.
கடந்த மே மாதத்தில் 20வது இந்தியா-ஈரான் கூட்டு ஆணையக் கூட்டத்துக்கு இணைத் தலைவராக தலைமை ஏற்க அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வந்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, போர் சூழல் குறித்து பேசியுள்ளார்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் மூன்று முறை பேசியுள்ளனர்.
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்பா கொமேனி நியமிக்கப்பட்ட பின் அராக்சியுடன் பேசிய ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் இஸ்ரேலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, இந்தியா எப்போதும் இஸ்ரேலின் பக்கமே நிற்கும் என்று உறுதியளித்திருந்தார்.
இஸ்ரேல் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது.
முதல் நாள் போரிலே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டார். உச்ச தலைவரின் மறைவுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள 57 உறுப்பு நாடுகளில் 10க்கும் குறைவான நாடுகள் மட்டுமே இரங்கல் செய்தியும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தன.
இதனையடுத்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் மீது போர் தொடுத்த அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண்டிக்கவில்லை.
போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி விரைவில் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதே நேரம் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குள்ளான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
மேலும் ஈரானால் தாக்கப்பட்ட சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட பல அரபு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவை ஈரான் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக சபாஹர் துறைமுகத் திட்டத்தில் தனது முதலீடுகளை இந்தியா குறைத்த போதும் அதை ஏமாற்றமளிப்பதாக கூறிய ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் அராக்சி, கோபத்தை விட இந்தியா மீதான நம்பிக்கையையே வெளிப்படுத்தியிருந்தார். இந்த துறைமுகத்தின் மூலம் ஈரானின் வர்த்தக வளர்ச்சிக்கு இந்தியாவின் தேவை உள்ளது என்பதை ஈரான் உணர்ந்திருந்தது. 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஈரானின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்த போதும் ஈரான் இந்தியாவுடன் நல்லுறவை பேணவே செய்தது.
ஐ.நா.,சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் இந்தியா நிதானமாக இருப்பது, ஈரானின் நலன்களுக்கு உதவுதால் இந்தியாவின் உறவை ஈரான் கெடுத்து கொள்ள விரும்புவதில்லை. ஈரானின் உச்ச தலைவர் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்தது அந்நாட்டுடன் நீண்டகாலமாக இருந்துவரும் ராஜதந்திர உறவின் வெளிப்பாடாகும்.
குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் நேரத்தில், இந்தியாவுடன் இணக்கமாக இருப்பது பெரிய பொருளாதார வாய்ப்புகளையும் சர்வதேச அளவில் இராஜதந்திர செல்வாக்கையும் வழங்கும் என்று ஈரான் முழுமையாக நம்புகிறது.
















