சோழர்கால பாணியில் தயாராகும் சுவாமிமலை ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் முரண்பட்ட ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம், சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஐம்பொன் சிலைகள் தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த கூடத்தில் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், ஐம்பொன் சிலைகள் தயாரிக்கும் கூடத்தை மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் பார்வையிட்டார்.
பின்னர், ஐம்பொன் சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மத்திய அமைச்சருக்கு சிற்ப கலைஞர்கள் விநயாகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர்.
பின்னர், தமிழ் ஜனம் செய்தியாளரிடம் பேசிய சிலை தயாரிப்பாளர்கள், சோழர் கால பாணியில் தயாராகும் ஐம்பொன் சிலைகளுக்கு சர்வதேச அளவில் மதிப்பும் மரியாதையும் உள்ளது என தெரிவித்தனர்.
ஐம்பொன் சிலைகளுக்கு தொல்லியல் துறையின் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றும், சான்று இல்லாததால் வெளிநாடுகளுக்கு சிலைகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் கூறினர்.
மேலும், ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் முரண்பட்ட ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















