வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் தேர்வுக்கான மறுதேர்வு நாளை நடைபெறும் நிலையில், இதையொட்டி நாடு முழுவதும் மாதிரி தேர்வு ஒத்திகைப் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
நாளை நடைபெறும் நீட் மறுதேர்வை 22.70 லட்சம் மாணவ – மாணவிகள் எழுதுகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் மூன்று லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 307 மையங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வை,மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவர்கள் எழுதுகிறார்கள்.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும்.
பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும் என்றும், காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் மாணவர்கள்தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீட் மறு தேர்வை மிக பாதுகாப்பாகவும், எந்த வித முறைகேடுகளும் இல்லாமலும் நடத்திக் காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
















