பாகிஸ்தான் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, குர்ஆனை மேற்கோள் காட்டி, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்ததில் இருந்தே எல்லை பிரச்னை, பலூசிஸ்தான் பிரச்சனை என பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே மோதலும் போர் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீண்ட காலமாகவே இந்திய ஆப்கானிஸ்தான் நல்லுறவையும் கேள்விக்குள்ளாக்கி வரும் பாகிஸ்தான் கடுமையான உணவு நெருக்கடிகாலத்தில் வழங்கிய கோதுமை அழுகிய நிலையில் இருந்ததாகவும், மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை என்றும் ஆப்கானிஸ்தான் அரசு வெளிப்படையாக குற்றம்சாட்டியது.
அதேசமயம் உயர்தரமான 50,000 மெட்ரிக் டன் அவசரக்கால கோதுமையை வழங்கிய இந்தியாவுக்கு ஆத்மார்த்தமான நன்றியை ஆப்கான் அரசு தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பைச் சீராக்கும்வகையில் ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகளுக்கு மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்குவதாக அறிவித்தது.
இந்த உதவியில் நோயறிதல், சிகிச்சை, பச்சிளங்குழந்தை மற்றும் சிறுவர் பராமரிப்புக்கான உபகரணங்கள், அத்துடன் வென்டிலேட்டர்கள், நோயாளி கண்காணிப்புக் கருவிகள், கார்டியோகிராஃப் இயந்திரங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் தொகுப்புகள், முகத்தாடை மின்வெப்பச் சாதனங்கள் மற்றும் சிறப்பு மருத்துவக் கருவித் தொகுப்புகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
உணவுப் பாதுகாப்பு முன்னெடுப்புகள், சுகாதாரம் மற்றும் மருந்து உதவிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன் கல்வி உதவித்தொகைகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக கடந்த ஜூன் 17 ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கான தனது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, இந்தியா ஐந்து டன் அத்தியாவசிய மருந்துகளையும் காபூலுக்கு வழங்கியது.
இந்நிலையில், ஆறு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த ஆப்கானிஸ்தான் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக உள்ள மவ்லவி அட்டவுல்லா ஓமரி (Mawlawi Attaullah Omari) மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து இருதரப்பு விவசாய ஒத்துழைப்பு ஆப்கானில் கோதுமை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய முறைகள் குறித்தும் விவாதித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான இந்திய தொழில்நுட்ப உதவியை இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் வர்த்தக வாய்ப்புகள் குறித்த தொழில் துறை கலந்துரையாடல் அமர்வில் பேசிய பேசிய ஆப்கான் வேளாண் அமைச்சர் ஓமரி, பல நூற்றாண்டுகளாக தொடரும் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவுகள் இந்த நூற்றாண்டுக்கே உரியவை என்று கூறியிருந்தார்.
மேலும் இந்தியர்களைச் சொந்த மக்களைப் போல் உணர்வதாகவும், ஆப்கானிஸ்தானியர்களும் இந்தியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏ-வைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆப்கான் அமைச்சரின் DNA கருத்துக்குக் காட்டமாக பதிலளித்துள்ள பாகிஸ்தான் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, முஸ்லிம்கள் இறைநம்பிக்கையற்றவர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் இந்தியாவுடனும் இந்துக்களுடனும் நெருங்கிய உறவைப் பேணும் தாலிபான்கள் உண்மையான முஸ்லீம்களாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் ஆப்கான் தாலிபான்களுக்கும் இடையிலான உறவு ‘எஜமான்-அடிமை’ உறவு போன்றது என்று கூறியுள்ள சௌத்ரி, தாலிபான்கள் இந்தியாவின் நலன்களுக்காகச் செயல்படுவதாகவும் அவர்கள் இந்தியாவின் அடிமைகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானை பலவீனப்படுத்த ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்நாட்டின் முப்படைகளின் மூத்த இராணுவ அதிகாரியின் இந்தக் கருத்து மேலும் ஆப்கானுடனான பாகிஸ்தானின் உறவை மேலும் சிக்கலாக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
















