மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கட்டிடங்களைச் சேதப்படுத்தியதையும், அழித்ததையும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கப் படைகளுக்கும் அதன் தளங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள், முன்பு கூறியதை விட மிக அதிகம் என்பதை பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் பிறகு, ஈரானுடனான போரின் தாக்கம் குறித்த தனது முதல் அறிக்கையை பென்டகன் கண்காணிப்பு அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
இதில், இராணுவத்தின் நவீன ஆயுத இருப்புப் பற்றாக்குறை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானங்கள், தளங்கள் மற்றும் தூதரக மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கை, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதமடைந்ததையும் அழிக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், கடந்த ஜூலை மாதம் இதுவரை ஈரான் போருக்கு 37.5 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் போரினால் ஏற்பட்ட மொத்தச் செலவு 113 மில்லியன் டாலர் என்று வெளியுறவுத் துறை ஜூன் மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. இதில் சுமார் 80 மில்லியன் டாலர் அவசரக்கால நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்த சுமார் 9,000 அமெரிக்கக் குடிமக்களை ட்ரம்ப் நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி தாயகம் அழைத்து வந்தது என்று வெளியுறவுத் துறை குறிப்பிட்டிருந்தது.
ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக வசதிகள் ஈரானியத் தாக்குதல்களால் சேதமடைந்தன என்றும், இதன் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 17 ஆயிரத்து 62 கோடி என்றும் பென்டகன் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதி வரை ஈராக் தூதரகம் 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், இதனால் கிட்டத்தட்ட 157 மில்லியன் டாலர்கள் வரை செலவானதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியதாக அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 14.75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ஈரானிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில், சுமார் 11.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாகவும் துபாயில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பயன்பாட்டுக் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் கிட்டத்தட்ட 12,00,00 டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கூடுதலாக, பாக்தாத், ஜெருசலேம், டெல் அவிவ், கெய்ரோ, அம்மான், குவைத் நகரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் உத்தரவிடப்பட்ட வெளியேற்றங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட கட்டுமானத் திட்டத் தாமதங்களால், மாதத்திற்கு மதிப்பிடப்பட்ட 24.5 மில்லியன் டாலர்கள் செலவானதாகவும் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரான் போரில் குறைந்தது 11 அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் போர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகவும் , ஏழு பேர் போர் சாராத நிகழ்வுகளில் உயிரிழந்ததாகவும் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஈரான் தாக்குதல்களில் குறைந்தது 417 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாக பென்டகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னணிக் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் முதல், வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் வரை பல்வேறு வகையான விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.
30 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு F-15E ஒரு F-35A, ஒரு A-10, ஏழு KC-135, ஒரு E-3 Sentry விமானம் ஆகியவற்றை இழந்துள்ளது. ஒரு HH-60W ஹெலிகாப்டர்,240 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு MQ-4C Triton என்ற உளவு மற்றும் கண்காணிப்பு விமானம், நான்கு AH-6 ஹெலிகாப்டர்,ஒரு AH-64 அப்பாச்சி (Apache) ஹெலிகாப்டர், ஒரு MH-60S ஹெலிகாப்டர் மற்றும் 30 MQ-9 ரீப்பர் (Reaper) ட்ரோன்கள் ஈரான் தாக்குதலில் அழிந்து போனதாக பென்டகன் உறுதிபடுத்தியுள்ளது.
















