பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் 5 ஆயிரத்து 206 நகரங்களில் 71 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், 2024-ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 722 இடங்களில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு மானியமாக வழங்கும் என்றும், மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வழக்கமான கட்டுமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















