ரஷ்யாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட முதல் 5 நாடுகளுக்கு 100சதவீத வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை முன்னெடுத்து செல்ல அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தீவிரமாக கூறி வந்தவரும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவரும், மறைந்த அமெரிக்க செனட்டருமான லிண்ட்சே ஓ. கிரஹாமின் பெயரால் அமெரிக்காவில் கொண்டு வரப்படும் புதிய சட்டம் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகளைக் குறிவைக்கிறது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 86-க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்க செனட் சபையில் லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் – 2026′ என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடந்த செவ்வாய் கிழமை இந்த சட்ட மசோதாவை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க பிரதிநிதிகள் சபை 214-க்கு 211 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உடனடியாக இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் ஈரானின் எரிசக்தித் துறை மீதான தடைகளை உள்ளடக்கிய ‘ஈரான் மீதான தடைகள் சட்ட’த்தையும் நீட்டிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை இரண்டாம் நிலை வர்த்தக வரிகள் விதிக்க அதிபருக்கு இந்தச் சட்டம் முழு அதிகாரம் அளிக்கிறது.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இது நாட்டின் மொத்த தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதமாகும்.
இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் பற்றக்குறை மற்றும் நிலையற்ற விலையேற்றம் இருந்தபோதிலும், உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிலையாக வைத்திருப்பதோடு, ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் முதல் 7 பில்லியன் டாலர் வரை அந்நிய செலாவணியை இந்தியா சேமித்தது.
அமெரிக்காவின் 100 சதவீத வரி அமலுக்கு வந்தால், அமெரிக்காவுடனான இந்தியாவின் 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருடாந்திர சரக்கு ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதி துறை பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்காக ரஷ்யாவுக்கு மாற்றாக மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதாலேயே உலகளாவிய எரிசக்தி சந்தை ஒரு சீராக உள்ளது என்பதை அமெரிக்காவுக்கு இந்தியா ராஜதந்திர ரீதியாக புரிய வைக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக உலகளாவிய விநியோகத்திற்காக ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், உலக எண்ணெய் விலைகள் பேரலுக்கு 150-டாலரைத் தாண்டுவதைத் இந்தியா தடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
















