தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம், வத்நகரில் உள்ள கபிலா நதிக்கரையோரம் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாதுகாப்பு கொள்கையில் நிலவிய தெளிவற்ற நிலையை பிரதமர் மோடி தீர்த்து வைத்ததாக தெரிவித்தார்.
தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதன் மூலம் முறைகேடுகள், ஊழல் மற்றும் மோசடி தொடர்பான பிரச்னைகளை பிரதமர் கையாண்டதாகவும் கூறினார். மேலும், செங்கோட்டையில் உரையாற்றியபோது தன்னை “முதன்மை சேவகர்” என பிரதமர் மோடி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அமித்ஷா, இதன் மூலம் அரசியலமைப்பின் உண்மையான உணர்வு நிலைநாட்டப்பட்டதாக தெரிவித்தார்.
















