மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி,
சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் நான்கு மாசி வீதிகளில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, குலுக்கல் முறையில் தேர்வான 2 ஆயிரம் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், குடிநீர்க் குழாய்கள் மூலம் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் நான்கு மாசி வீதிகளிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கோயில் அமைந்துள்ள வீதிகளுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
















