பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரதமர் மோடி, 72 மணிநேரத்தில் 15 உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
உலகின் பல நாடுகள் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.
உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியா வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து உலகின் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்துகொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசித்தார். அப்போது, இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். 6 மாதங்களாக ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கிய கவனம் பெற்றது. அப்போது மேற்காசிய போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதிகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிப்பதே இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். அப்போது, கருத்து வேறுபாடுகள் பூசல்களாக மாறக்கூடாது என்ற புரிதலோடு, பரஸ்பர மரியாதை, உணர்வுப்பூர்வ அணுகுமுறை, மற்றும் பரஸ்பர நலன் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உறவுகளைக் கட்டியெழுப்ப இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதேபோன்று, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் மலேசியா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, கஜகஸ்தான், தென்னாப்பிரிக்கா, எகிப்து உள்ளிட்ட 15 உலக தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த சந்திப்புகள் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக Bharat Innovates கண்காட்சி நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), யுபிஐ வழி நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை உலக தலைவர்கள் தெரிந்துகொள்ள இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், ஏற்கனவே அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இவ்வாறு, பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு அணுகூலங்கள் கிடைத்துள்ளன. பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக பாராட்டு தெரிவித்து வருகின்றன.
















