செங்கம் அருகே கரியமங்கலம் சுங்கச்சாவடியில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு மாதாந்திர சுங்கச்சாவடி பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சந்தா வழங்கப்பட்டுள்ள கல்லூரி பேருந்துகளில் ஒன்று பழுதடைந்ததால் அதற்கு பதிலாக மாற்று பேருந்து எடுத்து வந்ததாக தெரிகிறது.
ஆனால், அந்த பேருந்துக்கு பாஸ் இல்லாததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடியில் நிறுத்தி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அதே கல்லூரியைச் சேர்ந்த மற்ற பேருந்துகளும் மூன்று சுங்கச்சாவடி வழித்தடங்களில் நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















