சீனாவின் சக்திவாய்ந்த தலைவரும், அதிபர் ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரிய வலது கரமுமான 70 வயதான சாய் கி (Cai Qi), 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் காய் கி (Cai Qi) சீன அதிபருடன் இந்தியாவுக்கு வந்திருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. யார் இந்த சாய் கி Cai Qi ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2020-ம் ஆண்டு சீன- இந்திய எல்லை பகுதியில் கல்வான் பள்ளத் தாக்கில் நடந்த இராணுவ மோதலுக்குப் பின் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் ஷி ஜின்பிங் முதன்முறையாக இந்தியா வந்தார்.
தன்னுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது அலுவலகத்தின் தலைவராகவும் சீன அரசு கட்டமைப்பில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த அரசியல் ஆளுமையாகவும் விளங்கும் காய் கி (Cai Qi) யை அழைத்து வந்திருப்பது இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதற்கும், பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும் சீனா எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இந்திய பயணத்தின் போது சீன அதிபருடன் காய் கி (Cai Qi)யும் உடனிருப்பது சீன அரசு நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் நிர்வாக அதிகாரங்கள் குவிந்திருப்பதையும், நிரூபிக்கப்பட்ட அரசியல் விசுவாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
2017-ல் சீனாவின் இரண்டாவது மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயரிய முடிவெடுக்கும் குழுவான 7 உறுப்பினர்களைக் கொண்ட ‘பொலிட்பீரோ நிலைக்குழுவில்’ (Politburo Standing Committee) 5-வது மிக முக்கியமான தலைவராக காய் கி உள்ளார்.
நெறிமுறைகளின்படி சீனாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபர் பிரதமர் லி சியாங் என்றாலும், அதிபர் ஜி ஜின்பிங்குடன் எப்போதும் நிழல் போல பயணிப்பதால் காய் கி-யை சீனாவின் உண்மையான “நம்பர் 2” தலைவராகவே உலகம் பார்க்கிறது.
ஜி ஜின்பிங் அதிபர் ஆவதற்கு முன்பே சீனாவின் கிழக்குக் கடலோர மாகாணங்களான ஃபுஜியான் மற்றும் ஜெஜியாங்கில் ஜி ஜின்பிங்குடன் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்தே இருவருக்கும் இடையே கால நீண்ட அரசியல் நட்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஷி மற்றும் காய் இருவரும், தங்களின் இளம்பருவத்தில் தொழிலாளி, விவசாயி, வீரர் மாணவர்களாக, கலாச்சாரப் புரட்சியின் கொந்தளிப்பான காலகட்டங்களைக் கடந்து வந்துள்ளனர்.
முன்னதாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் மேயராகவும், பின்னர் பெய்ஜிங் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றிய காய் கி (Cai Qi) 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடத்திகாட்டியிருந்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது அலுவலக இயக்குநராகவும் மத்திய கட்சிப் பள்ளியின் தலைவராகவும் அதிபர் ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவராகவும் உள்ள காய் கி (Cai Qi), கட்சியின் அன்றாடச் செயல்பாடுகள், சித்தாந்தப் பணிகள் மற்றும் முக்கிய தேசியத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
அரசு நிர்வாகத்தின் நிழலிலிருந்து வெளியேறி, ராஜதந்திரப் பணிகளை மேற்கொண்டபோது, முக்கியமான சர்வதேச உச்சிமாநாடுகளில் சர்வதேச அதிகாரிகளையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் காய் கி தான் வர வேற்றுள்ளார்.
சீனாவின் மத்திய பாதுகாப்புப் பணியகம் மற்றும் அதிபரின் பயணத் திட்டங்கள், பாதுகாப்பு நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் காய் உள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் “பெருமதிப்பிற்குரிய மாலுமி” (Great Helmsman) என்ற சொல் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்குக்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மாவோவுக்குப் பிறகு வந்த எந்தவொரு சீனத் தலைவருக்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
2017 அக்டோபரில் நடைபெற்ற 19-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பெய்ஜிங்கின் அப்போதைய கட்சித் தலைவராக இருந்த காய் கி, ஷி ஜின்பிங்கை ஒரு “புத்திசாலித்தனமான தலைவர்” என்றும், கட்சியை வழிநடத்தும் “மாலுமி என்றும் பகிரங்கமாகப் புகழ்ந்தார்.
இதன் மூலம் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் சித்தாந்தமும் அதிகாரமும் மாவோ சேதுங்கின் நிலைக்கு இணையாக உயர்த்தப்பட்டது.
பின்னர் 2021-ல் கட்சியின் அதிகாரப்பூர்வ தீர்மானங்களிலும் “மாலுமி” என்றே முறைப்படி ஷி ஜின்பிங் அழைக்கப்பட்டார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் முதன்மைத் தளபதி என்று வர்ணிக்கப்படும் காய் கி சர்வதேச அரசியல் களத்தில் சீனாவுக்கான அடுத்த அதிபராகவே கருதப்படுகிறார்
















