விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை காவல் எல்லைக்குள் ஆயிரத்து 562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக சிலை வழிபாடு மற்றும் ஊர்வலத்திற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்தவும், விசர்ஜன ஊர்வலத்திற்கும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களை தவிர்த்து, இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை காவல் எல்லையில் 16 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி சிலைகளை வைக்கக் கூடாது என்றும், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
















