பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில் டாலருக்கு மாற்று உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், நாகரீகமான முறையில் புதிய நாணயப் புரட்சியை ஏற்படுத்த இந்தியா வலியுறுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரிக்ஸ் கூட்டமைப்பை “அமெரிக்க எதிர்ப்பு” என்று அழைத்ததோடு, டாலரைத் தவிர்க்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
தனது பிரிக்ஸ் உறுப்புரிமைக்கும், குவாட் மற்றும் ஜி7 உறவுகளுக்கும் இடையில் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்கும் இந்தியா இதில் புதிய வியூகத்தை அமைத்துள்ளது. அது தான் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய (CBDC) திட்டமாகும்.
எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேலும் திறமையானதாக மாற்றுவதற்காக, உறுப்பு நாடுகளின் பணம் செலுத்தும் முறைகளுக்கு இடையே செயல்படுவதற்கு முக்கியத்துவம் அளித்த, 2025-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் இந்தியா இந்த முன்மொழிவை அளித்துள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி, டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதற்கான முறையான முன்மொழிவை இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இது நடந்தால் இத்தகைய ஒரு திட்டம் பிரிக்ஸ் தலைவர்களின் முன் நேரடியாக வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதிலும் பல்வேறு நாடுகளின் குழுவில் நிதி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதிலும் நடைமுறை சிக்கல்களும் சவால்களும் உள்ளன.
நம்பகமான மாற்று ஏற்பாடுகள், பணப்புழக்கத்திற்கான காப்புறுதிகள், பொதுவான தீர்வுத் தரநிலைகள், உண்மையான இணக்கக் கட்டமைப்புகள், மற்றும் குவியும் நாணய இருப்புகளைக் கையாள்வதற்கான தெளிவான விதிகள் இல்லாமல் இந்தியாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வதிலும் சிரமங்கள் உள்ளன.
முன்னதாக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கான ஒரே நாணயம் என்பதன் மூலம் டாலருக்கு மாற்றாக யுவானை மையமாகக் கொண்ட ஒரு நிதி பரிவர்த்தனையை உருவாக்கி தனது சொந்த செல்வாக்கை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது.
இதை ஒரு நாணயப் பிரச்சனையாகக் கருதாமல், பணம் செலுத்தும் பிரச்சனையாகக் கருதும் வரை, ஒரு உண்மையான பிரிக்ஸ் நாணயம் என்பது வெறும் பேச்சுப் பொருளாகவே இருக்கும். நடைமுறைக்கு வராது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறை 226 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு எந்தப் பயனும் தராமல், இறக்குமதிகளை இன்னும் எளிதாக்கிவிடும் என்றும் அதனால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக கூறப் படுகிறது.
எனவே, டாலருக்கு ஒரேயொரு மாற்று என்று இல்லாமல் பல படிநிலைகளிலான ஒரு அடுக்கு அணுகுமுறையை இந்தியா உருவாக்க முயற்சி செய்கிறது.
டாலர் வலுவாக இருக்கும் இடங்களில் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதும், வர்த்தகப் பரிமாற்றங்கள் அதிகமாகும் இடங்களில் உள்ளூர் நாணயத் தீர்வை விரிவுபடுத்துவதும் பணப்புழக்கத்தை நிர்வகிக்க மாற்று வழித்தடங்களை உருவாக்குவதும் என இந்தியா கவனமாகவே செயல்படுகிறது.
பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைப்பதற்கான முதல் முறையான முன்மொழிவு, அது எச்சரிக்கையுடன் கூடியதாக இருந்தாலும், ஒரு உண்மையான முதல் படியாகும்.
















