அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் புதிய தலைமைச் செயலகத்தை கொண்டுவர வேண்டும் என எம்.பி. துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி கே.கள்ளிக்குடி ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரகால சட்டம் மற்றும் மிசா என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸை எதிர்த்த திராவிட இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதைகளை அனுபவித்தனர், பலர் உயிரிழந்தனர்.
அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும் அன்று கைது செய்யப்பட்டனர். ஆனால், சில அரசியல் ஆளுமைகள் மீது அது புனையப்பட்டதாகவும் இருந்தது. திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, ஐயா வைகோதான் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தில் முதலில் கைதானவரும், கடைசியாக விடுதலையானவரும் ஆவார். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அன்றைக்கே திருச்சியை இரண்டாவது தலைநகரமாகக் கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது என்று தீர்க்கதரிசியாக சொன்னார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விண்ணை முட்டும் ரியல் எஸ்டேட் விலையால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரத்தின் ஒரு பகுதியை திருச்சிக்கு மாற்றுவது சென்னைக்கு மிகப்பெரிய பலம்.
திருச்சி இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பெரும் வளர்ச்சியைப் பெறும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி போன்ற தென்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளிக்க சென்னைக்குசெல்ல இரண்டு மூன்று நாட்கள் வரை செலவாகிறது.
திருச்சியைக் கொண்டுவந்தால் தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் 3 முதல் 4 மணி நேரத்தில் வந்துவிடலாம். திருச்சியில் போதுமான நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் உள்ளன. எனவே, இது சாதாரண ஜனங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
















