உலக அளவிலான வர்த்தகத்திற்கு பாதுகாப்பான கடல்வழிப் பாதைகள், திறந்த நிலையிலான வழித்தடங்கள் இன்றியமையாதவை என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகின் 21 நாடுகளின் சங்கமமாக திகழ்வதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி ஒட்டுமொத்தமாக நான்கரை மடங்கு வளர்ந்துள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தை இந்தியா நடத்துவதாகவும் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பம், உலகளவில் பணப்பரிமாற்ற புரட்சியை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டு செல்வதாகவும், சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
உலகெங்கும் உள்ள மக்களுக்காக புதிய வாய்ப்புகளை பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவிலான வர்த்தகத்திற்கு பாதுகாப்பான கடல்வழிப் பாதைகள், திறந்த நிலையிலான வழித்தடங்கள் இன்றியமையாதவை என கூறினார்.
கடல்வழிப் பாதைகள், மாலுமிகள் பாதுகாப்பாக இருக்கும்போது தான் உலகளவிலான வர்த்தகம் முன்னேற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா-ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர், பாரத் மண்டபத்தில் வர்த்தக கண்காட்சியை பார்வையிட்டனர். சர்வதேச தொழில்துறை மற்றும் வர்த்தக கண்காட்சியை இரு தலைவர்களும் நேரில் பார்வையிட்டனர். இதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
ரஷ்யாவுக்கு வருகை தருமாறு அதிபர் புதின் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற உள்ள இந்தியா- ரஷ்யா 24வது உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். உச்சிமாநாட்டின் தேதிகள், இரு தரப்பினரின் பரஸ்பர வசதிக்கு ஏற்ப தூதரகங்கள் மூலம் முடிவு செய்யப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















