பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் டெல்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்தியா வெளியிட்ட கூட்டுப்பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
உலகளவில் நிலவும் போர், ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,
‘பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி’ என்பதை மையமாக வைத்து, இந்தியா உருவாக்கிய பிரிக்ஸ் டெல்லி பிரகடனம் ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்டுள்ளது.
அதன்படி, எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று பிரிக்ஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க பிரிக்ஸ் நாடுகள் உறுதி பூண்டுள்ளன.
ஐ.நா-வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது கூட்டு நடவடிக்கை எடுக்கவும் பிரிக்ஸ் பிரகடனத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வலுவான உலகளாவிய நடவடிக்கைகள் தேவை என்றும் பிரிக்ஸ் நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாத நிதி உதவி மற்றும் பயங்கரவாதிகளுக்கான புகலிடங்களை முற்றிலுமாக ஒழிக்க பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன.
















