இந்தியாவின் பிரிக்ஸ் கொள்கை எதுவென்று கேட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, அதே சமயம் மேற்கத்தியம் சாராதது என்ற கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த வெளியுறவுத்துறை கொள்கை இன்றைய புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாறி வரும் உலக அரங்கில் தனது தனித்துவமான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்தும் இந்தியா, எல்லோருக்குமான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியைத் தனது நோக்கமாக கொண்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு போர்க்களமாகவோ, பனிப்போர் காலத்து அமைப்பாகவோ மாற்ற விரும்பாத இந்தியா, பிரிக்ஸ் அமைப்பின் நோக்கம் உலகளாவிய தெற்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே தவிர, மேற்கத்திய நாடுகளுடன் மோதலில் ஈடுபடுவது அல்ல என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.
உண்மையிலேயே மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கமோ அந்நாடுகளின் வழிகாட்டுதலோ இல்லாத, வளரும் நாடுகளின் தனித்துவமான தளமாக பிரிக்ஸ் விளங்குகிறது.
சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானதாக மாற்ற முயன்றாலும், இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டின் மூலம் பிரிக்ஸ் அமைப்பை ஒரு தூய பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகவே தக்கவைக்க பாடுபடுகிறது.
உலக அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல், பல உலகளாவிய சக்திகள் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, மேற்கத்தியம் சாராத ஒரு நாடாக இருந்து கொண்டே மேற்கத்திய நாடுகளுடன் மிக வலுவான உறவைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.
இந்தியாவின் அணுகுமுறை என்பது அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் (revisionist) நோக்கத்தைக் கொண்டதல்ல, மாறாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் தன்மையைக் கொண்டதாக அமைந்துள்ளது.
அதனால் தான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் குவாட் அமைப்பில் உறுப்பினராக இருப்பதோடு, ரஷ்யா மற்றும் சீனாவுடன் பிரிக்ஸ் அமைப்பிலும் ஒரு தீவிர உறுப்பினராக இந்தியாவால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பரந்த உலக தெற்குப் பகுதி நாடுகளுடனான சீரான உறவுகளையும் இந்தியா பேணி வருகிறது.
முன்னதாக 2023 ஆகஸ்ட்டில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், வெற்றிபெற்ற டிஜிட்டல் இந்தியாவின் உள்கட்டமைப்பு விஷயங்களை பிரிக்ஸ் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, 2024-அக்டோபரில் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உள்ளூர் நாணயங்களில் பிரிக்ஸ் நாடுகளின் தடையற்ற எல்லை தாண்டிய வர்த்தகம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பிரிக்ஸ் என்பது தனிப்பட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமான அமைப்பு அல்ல. மாறாக தீர்க்கமான முடிவுகளை மையமாகக் கொண்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு சர்வதேச தளம் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக மேற்கத்திய சக்திகளுடன் முழுமையாக அணிசேர்வது அல்லது அவர்களுக்கு எதிராக ஒரு எதிர் அணியை உருவாக்குவது ஆகிய இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ‘குளோபல் சவுத்’ நாடுகளுக்கு இல்லை என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை என்ற பிரதமர் மோடியின் புதிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது.
















