போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தொடர் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்புவதற்காக குவிந்த பயணிகள், போதிய பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.
வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை முடிந்து, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்பினர்.
அந்த வகையில் சென்னை, பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பயணிகள், முன்பதிவு செய்யாதவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















