லண்டனின் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெத்திட்டுள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக சுமார் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கு ஏதுவாக, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘GCC காரிடார்’ பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழகத்தில் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் , மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூரில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில்
வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
லண்டனில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர், முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்தனர்.
அப்போது, ஆகஸ்ட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்,
தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும்,
வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
















