பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் விதமாக, சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் வளாகத்தில், ‘ஆசீர்வாதத்தின் தீபம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பிரதமரின் கால் நூற்றாண்டு கால பொதுவாழ்க்கை மற்றும் மக்கள் நலப் பணிகளை பாராட்டும் விதமாக தீபமேற்றி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சுதா சேஷையன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல், முன்னணி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிர்வாகிகளான தினமலர் ஆதிமூலம், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, தினத்தந்தியின் சிவந்தி ஆதித்தன், பாலிமர் கல்யாண சுந்தரம், தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது மற்றும் செயல் இயக்குநர் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, நடன இயக்குநர் கலா, கஸ்தூரி, சின்னிஜெயந்த் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஊடகத்துறையை சேர்ந்த கோலாகல ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழாவில் கலந்து கொண்டனர்.
















