100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகோரி 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக்கோரி சம்பத்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வாக்குமூலப் பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவுக்கு அக்டோபர் 9-ம் தேதிக்குள் தோனி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
















