திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வகித்து வரும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 22 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏழுமலையான் கோயிலுக்கு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலமாக திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருமலைக்கு வந்த திருக்குடைகளை, இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்களின் ஆசீர்வாதத்துடன் பக்தியோடு திருக்குடைகள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
எந்த நன்கொடையும் பெறாமல் அறக்கட்டளை சார்பிலேயே திருக்குடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
















