திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதம் ஆனதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், எதிர்மனுதாரர்களை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
















