திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள் உற்சவத்தில் மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தகர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில், 5ஆம் நாள் காலை உற்சவத்தில், மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்த நிகழ்வை நினைவுக்கூரும் வகையில், மோகினி அலங்காரத்தில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளி, நாச்சியாருடன் இணைந்து நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தார்.
சுவாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் திரண்டு, ‘கோவிந்தா’ கோஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர். வீதி உலாவின்போது மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
















