இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவாகவே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான பவனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நடைபெற்ற “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிர்காலம்” குறித்த சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றத்திற்கான பொறுப்பு பெரும்பாலும் வளரும் நாடுகள் மீது சுமத்தப்படுவதாக தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைந்து முன்னெடுக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளதாக கூறினார். அமெரிக்காவில் தனிநபர் கார்பன் உமிழ்வு 13.4 டன்னாகவும், சீனாவில் 8.9 டன்னாகவும் உள்ள நிலையில், இந்தியாவில் 2.1 டன்னாக மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறினார். மேலும், பாரிஸ் மாநாட்டில் அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
















